ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகிய தகவல் 

கொலை முயற்சி சதித் திட்டத்தின் பின்னணியில் ரோ உளவு அமைப்பு செயற்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி

by Staff Writer 17-10-2018 | 10:05 AM
Colombo (News 1st) தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் ரோ (RAW) உளவு அமைப்பு செயற்பட்டிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவுப்பிரிவின் இவ்வாறான நடவடிக்கைகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிந்திருக்காத நிலையில், ரோ அமைப்பின் திட்டம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் 'தி ஹிந்து' தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான செய்தி ஊடகங்களில் பிரசுரமாகும் வரையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிவிக்க மறுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரிடம் வினவிய பின்னரே இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடிந்ததாக தி ஹிந்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.