வைத்தியருக்கு 2 வருட சிறைத்தண்டனை

களுபோவில வைத்தியசாலை வைத்தியருக்கு 25 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 17-10-2018 | 3:39 PM
Colombo (News 1st) தன் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட களுபோவில போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணருக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் 25 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த பெண்ணொருவரிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, குறித்த வைத்தியர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. தன் மீதான குற்றச்சாட்டை வைத்திய நிபுணர் ஏற்றுக்கொண்டமையை அடுத்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றவாளிக்கு 25 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையை நீதிபதி விதித்துள்ளார். இதனிடையே, 25,000 ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈட்டையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. களுபோவில போதனா வைத்தியசாலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.