குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி 2000 பேர் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி 2000 பேர் மனு

by Staff Writer 16-10-2018 | 1:37 PM
இந்தியாவின் முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்ற கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழக ஆளுநருக்கு 2,000 பேர் தபால் அனுப்பியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள்தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, காங்கயம் பகுதியில் புரட்சிகர முன்னணி சார்பில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. காங்கையம் தபால் நிலையத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டம், மாலை 5 மணிவரை நீடித்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, சுமார் 2,000 பேர் ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.