மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் போல் அலன் உயிரிழப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் உயிரிழப்பு

by Bella Dalima 16-10-2018 | 3:53 PM
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் (Paul Allen) புற்றுநோயால் இன்று உயிரிழந்தார். அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்த இவர், 14 வயதில் லேக்சைட் பாடசாலையில் படிக்கும் போதுதான் தன்னைப் போலவே கணினியில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 1975 இல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவினர். 1981 இல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது. மைக்ரோசொப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரராக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றுவந்தார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்திற்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஆபிரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசொப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.