மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆய்வு

மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆய்வு - விசேட குழு நியமனம்

by Staff Writer 16-10-2018 | 7:21 AM
Colombo (News 1st) எரிபொருள் விலை உயர்வுடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அமைய, மின் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், மின் உற்பத்திக்கான 95 ரூபாவிற்கு டீசல் பெற்றுக்கொண்டபோதிலும், தற்போது 123 ரூபாவிற்கு டீசலை கொள்வனவு செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், நியமிக்கப்படவுள்ள குழுவின் ஆலோசனைக்கு அமைய, எதிர்கால நடடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில், மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா என கலாநிதி சுரேன் பட்டகொடவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு 15 நாட்களிற்கு முன்னர், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் சட்டமூலத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்த வேண்டுமாயின், சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு, மின்சாரசபை தயாராகிவருவதாக மின்சக்தி தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.