சவூதி அரேபிய ஊடகவியலாளர்: வௌிப்படையான விசாரணை தேவை

சவூதி அரேபிய ஊடகவியலாளர் குறித்த விசாரணை வௌிப்படையாக இருக்க வேண்டும் - துருக்கி

by Staff Writer 15-10-2018 | 6:58 AM
சவூதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி (Jamal Khashoggi) காணாமல் போனமை குறித்த விசாரணைகள் வௌிப்படையாக இருக்க வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் எவ்வகையான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வௌிப்படுத்த வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, இந்த விடயம் குறித்து சவூதி மன்னர் சல்மான் மற்றும் துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். நேற்றைய தினம் இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த ஊடகவியலாளர் விடயம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடுகின்றமை இதுவே முதற்தடவையாகும். இந்தநிலையில், இரு நாடுகளும் இணைந்து இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். சவூதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர் ஜமால் கசோஜி, இஸ்தான்புல்லிலுள்ள தமது நாட்டுத் தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றைப் பெறுவதற்காக சென்றதன் பின்னர் அவர் காணாமற்போயிருந்தமை நினைவுகூரத்தக்கது.