அமைச்சரவைக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு

அமைச்சரவைக்கு வாருங்கள் - த.தே.கூட்டமைப்பை அழைக்கும் விஜயகலா

by Staff Writer 14-10-2018 | 8:35 PM

''அரசாங்கத்தைக் குறைகூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது. எனவே, அவர்களுடன் நாங்கள் பயணிக்க வேண்டும்''  எனவும் அதற்கென பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிடில், அமைச்சுப் பதவியை கையில் எடுக்குமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவளிக்க வேண்டுமா இல்லையா என்பது பல விடயங்களின் தீர்வில் தங்கியிருப்பதாக அங்கு உரையாற்றும் சந்தர்ப்பத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையின் கீழ், பருத்தித்துறை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட மக்கள் இன்று பயன்பெற்றனர். பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன், ஏனைய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனும் கலந்துகொண்டிருந்தார்.