வறுமை குறைவடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

நாட்டில் வறுமை குறைவடைந்துள்ளதாக சபாநாயகர் கூறுகின்றார்: உண்மை என்ன?

by Bella Dalima 13-10-2018 | 7:39 PM
Colombo (News 1st) நிலையான அபிவிருத்திக்காக பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தொடர்பான செயலமர்வொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய செயலமர்வில் உரையாற்றினார். இதன்போது,
கடந்த காலத்தில் சிறந்த அபிவிருத்தியை இலங்கை எட்டியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய தகவலுக்கு அமைய, எமது வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை உயர் மட்டத்தில் உள்ளது. வறுமை சுட்டெண் 4.1 வீதம் வரை குறைவடைந்துள்ளது.
என சபாநாயகர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, பேராதனை பல்கலைக்கழகத்துடன் மக்கள் சக்தி மேற்கொண்ட ஆய்வின் ஊடாக உறுதி செய்யப்பட்டது. சர்வதேச அறிக்கைகளுக்கு பதிலாக, இந்த நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துக்காட்டும் அறிக்கைகளை ஆராய்ந்தால், இவ்வாறான போலியான கருத்துக்களை எதிர்காலத்தில் கூற வேண்டிய நிலை ஏற்படாது.