அம்பாறையில் நடைபவனியும் கையெழுத்து வேட்டையும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் நடைபவனியும் கையெழுத்து வேட்டையும்

by Staff Writer 13-10-2018 | 9:22 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் இன்று நடைபவனியும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். திருக்கோயில் ஶ்ரீ வெட்டுக்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் ​தேங்காய் உடைத்து நடைபவனியை ஆரம்பித்தனர். அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கும் மனித உரிமை ஆணையாளருக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் கையெழுத்து வேட்டையொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று பார்வையிட்டார். எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி ஐந்தாவது நாளான இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நிறைவு பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி கிளிநொச்சி, வவுனியா மற்றும் மதவாச்சியூடாக இன்று அநுராதபுரத்தினை சென்றடைந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பல முறை வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அது இதுவரை நிறைவேறவில்லை.