மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

நாட்டிற்குத் தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை

by Staff Writer 13-10-2018 | 2:01 PM
Colombo (News 1st) நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளின் 90 வீதமானவற்றை எதிர்வரும் 2 வருடங்களுக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனூடாக, இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு செலவிடும் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை சேமித்து வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் 46 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து புதிய உற்பத்தி நிறுவனங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சுகாதார அமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹொரணை, கண்டி மற்றும் திகன பிரதேசங்களில் 3 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், மூன்று மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அடுத்த வருடம் முதல் திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டின் மருந்து தயாரிப்பிற்காக நிர்மாணிக்கப்பட்ட நவீனரக மருந்து தொழிற்சாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ரத்மலான - கந்தவெல பகுதியில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் ஊடாக, சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவிற்கு அவசியமான 70 வீதமான மருந்துகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.