மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி

by Bella Dalima 11-10-2018 | 4:21 PM
தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாகி விட்ட டாப்சி, தமிழ் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், தமிழில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்கவுள்ளார். நயன்தாரா முன்னிலை கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார். படத்தின் தலைப்பு மற்றும் 'பர்ஸ்ட் லுக்' நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்சி அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.