தலதா அத்துகோரலவிற்கு சி.வி.விக்னேஷ்வரன் பதில்

அரசியல் கைதிகள் யாருமில்லை: தலதா அத்துகோரலவிற்கு சி.வி.விக்னேஷ்வரன் பதில்

by Staff Writer 11-10-2018 | 7:27 PM
Colombo (News 1st)  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இன்று கலந்துரையாடினர். யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பை அடுத்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் பின்வருமாறு தெரிவித்தார்,
கௌரவ தலதா அத்துகோரல அமைச்சர் அவர்கள் அரசியல் கைதி என்று இலங்கையில் எவரும் இல்லை என்று சொல்லியிருக்கின்றார். அது தவறு. அரசியல் காரணத்திற்காக ஒரு பிரத்தியேகமான சட்டத்தின் கீழ் தான் அவர்களை நாங்கள் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கின்றோம். அல்லது அவர்களை கைது செய்திருக்கின்றோம். அந்த பிரத்தியேக சட்டத்தில் இருக்கின்ற அடிப்படையில், இவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டிருக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்க முடியாது. அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்கள் உண்மையாக நடைபெற்றுள்ளனவா என வேறு தனிப்பட்ட சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறுமனே ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அரசியல் கைதிகள் தான்.
என தெரிவித்தார். இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் விழிப்புணர்வு நடைபவனி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை முல்லைத்தீவு - பணிக்கன் குளத்தில் ஆரம்பமான நடைபவனியில் பொதுமக்களும் மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அநுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.