இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பார்வையிட்ட மக்கள் சக்தி

இடம்பெயர்ந்து சமுத்திராதேவி மண்டபத்தில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்ட மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 10-10-2018 | 8:41 PM
Colombo (News 1st)  சீரற்ற வானிலையை அடுத்து கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் வாழும் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடி மக்கள் சக்தி குழுவினர் இன்றும் பயணித்திருந்தனர். வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிலர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகர சபைக்கு சொந்தமான சமுத்திராதேவி மண்டபத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் இன்று காலை சென்றிருந்தனர். இந்த செயற்பாட்டில் மொரட்டுவை பல்கலைக்கழகம் இன்றும் இணைந்துகொண்டிருந்தது. புத்கமுவ வீதி, கொடியாகொட பாலத்திற்கு அருகில் ஹீன் கால்வாயின் எல்லை அமைந்துள்ள புஞ்சி பஞ்சிகாவத்தை என கூறப்படும் பிரதேசத்தில் வாழும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் அவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். ஹீன் கால்வாயின் எல்லையிலுள்ள தமது கிராமத்திற்கு மக்கள் சக்தி குழுவினரை அம்மக்கள் அழைத்துச் சென்றனர். ஹீன் கால்வாய் பெருக்கெடுத்தமையால் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிள்ளைகளின் புத்தகங்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. காலத்திற்குக்காலம் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அவை வார்த்தைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இங்குள்ள மக்கள் குறிப்பிட்டனர்.