நிவாரணம் வழங்குவதில் தாமதம்: உச்சநீதிமன்ற உத்தரவு

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 10-10-2018 | 5:04 PM
Colombo (News 1st) உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் இருக்குமாயின் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென பண்டாரவளை மக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு, ஈவா வனசுந்தர , விஜித் மலல்கொட மற்றும் எல்.டீ.பீ.தெஹிதெனிய உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இன்று ஆராயப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் நிலவுவதாக புலப்படுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த மனுவில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபை , சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.