நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 09-10-2018 | 12:27 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸுக்கு சென்றுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு தொலைபேசியூடாக ஆலோசனை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும்போது, நிதியொதுக்கீடுகள் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மழை வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.