கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி

இளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி

by Staff Writer 09-10-2018 | 10:31 PM
Colombo (News 1st) இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது. இளையோருக்கான ஒலிம்பிக் விழா ஆர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரிஸில் நடைபெற்று வருகின்றது. இதில் மகளிருக்கான கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை B குழுவில் போட்டியிடுகின்றது. எகிப்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீராங்கனைகள் 17 புள்ளிகளைப் பெற்றனர். எதிராளியான எகிப்து வீராங்கனைகளால் 15 புள்ளிகளையே பெற முடிந்தது. இறுதியில் 17 - 15 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை அணி ஈட்டிய முதல் வெற்றி இதுவாகும். இலங்கை மகளிர் கூடைப்பந்தாட்ட அணி அடுத்ததாக யுக்ரேன் மற்றும் வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.