இலங்கை - சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை - சீஷெல்ஸ் இடையே இரு உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 09-10-2018 | 9:12 AM
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (09) அந்நாட்டின் உப ஜனாதிபதி வின்ஸ்டன்ட் மெரிடன்ட்டை (Vincent Meriton) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி ஃபோவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்துள்ளார். சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனீ போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (08) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் வலய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. சீஷெல்சுக்கு போதைப்பொருள் நிவாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சீஷெல்ஸ் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். அத்துடன், தமது நாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் பயிற்சியளிக்குமாறும் சீஷெல்ஸ் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகள் குறித்து விரைவில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீஷெல்ஸ் மாணவர்களுக்கு தொழில்பயிற்சிக்காக வருடாந்தம் 10 புலமைப்பரிசிலை வழங்குவதற்கு இணங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தொழில் பயிற்சித்துறை தொடர்பான இரண்டு இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாதிடப்பட்டன.