அரசியல் கைதிகளுக்கு TNA பொறுப்புக் கூற வேண்டும்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு முழுப் பொறுப்பையும் TNA ஏற்க வேண்டும்

by Staff Writer 08-10-2018 | 4:33 PM

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான முழு பொறுப்பையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே ஏற்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தடவைகள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு அழுத்தம் கொடுத்து உயிர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுமனே ​வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழுள்ள சரத்துக்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தாலே அனைவரும் தண்டனையை முடித்து வௌியேறியிருப்பார்கள் எனவும் அவர்களின் நன்னடத்தையை கருத்திற்கொண்டு விடுதலை செய்வதற்கும் அந்த சட்டத்தில் இடம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு இது தெரியாதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, இனியும் காலம் தாழ்த்தாது இந்த விடயங்களை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறி அரசியல் கைதிகளை பொதுமன்னிப்புடன் அல்லது புனர்வாழ்வுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு எனவும் தமிழர் விடுதலை கூட்டணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.