இறக்குமதி தீர்வை நீக்கிய வாகனத்தை பெறுவதற்கு தகுதி

65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனத்தைப் பெறுவதற்கு தகுதி உள்ளது - சி.வி.

by Staff Writer 06-10-2018 | 7:32 AM
Colombo (News 1st) மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்களைப் போலவே, தனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்கும் குறைவான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் வௌியான செய்திக்கு பதில் வழங்கும் வகையில், முதலமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முதலமைச்சர் என்ற வகையில் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு, தனக்கு தகுதியுள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதன்காரணமாக, முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்து, தனது பதவிக்கு உரித்தான தீர்வை வரி நீக்கிய அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு தான் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அது அமைச்சர் மங்கள சமரவீரவினால் நிராகரிக்கப்பட்டதாக தான் அறிந்துகொண்டதாகவும் வட மாகாண முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இது தனக்கான சட்டப்படி உரித்து என்பதை வலியுறுத்தி, அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கூறி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பான விமர்சனங்கள் குறித்து ஆராயுமிடத்து, அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.