தெபுவன பொலிஸ் அதிகாரி கைது தொடர்பில் நலீன் பண்டார தௌிவூட்டல்
by Staff Writer 06-10-2018 | 9:05 PM
Colombo (News 1st) சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலீன் பண்டார கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.
தெபுவன பொலிஸ் அதிகாரி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது பிரதி அமைச்சர் தௌிவுபடுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது,
தெபுவன பொலிஸ் அதிகாரி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. அது அநீதியான காரணமாக அவருக்கு இருந்த போதிலும், கடமையை சரியாக நிறைவேற்றி, உயர் அதிகாரியினால் ஏதேனும் தவறு நேர்ந்ததா என்ற பிரச்சினையுள்ளது. மில்லேனிய பிரதேச செயலகத்தில் உடுவர என்ற கிராமத்தில் டி.ஏ.விக்ரம பெரேரா குணவர்தன என்பவருக்கு சொந்தமான லொறியொன்றுள்ளது. அவர் சமுர்த்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், அவருடைய மற்றும் அவரின் உறவினர்களின் பெயர்களில் ஆறு மண் குவாரிகளும் காணப்படுகின்றன. மொட்டு சின்னத்தில் மில்லேனிய பிரதேச சபை உறுப்பினராக அவரின் மனைவி நிர்மலி குணவர்தன செயற்பட்டு வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரம் இருந்த போதிலும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதா? அதன் ஊடாகவா கைது செய்யப்பட்டது என்பது தொடர்பில் அடுத்தக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவரும் என நான் நினைக்கின்றேன். சாதாரணமானவர்களுக்கு ஒரு நீதியும் பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு நீதியும் நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் இது அல்ல. அனைவருக்கும் ஒரே சட்டத்தையே அரசு நடைமுறைப்படுத்துகின்றது.