by Staff Writer 06-10-2018 | 12:31 PM
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என வளமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று சோகம பகுதியில் 65 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தப்போவ பகுதியில் 54 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ரத்மலானையில் 52 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக தெதுறு ஓயா மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள்
திறக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், கடுங்காற்று காரணமாக நவகத்தேகம பகுதியில் 10 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.