ஒலுவில் மீனவர்கள் தொடர் போராட்டம்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களும் பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 06-10-2018 | 8:55 PM
Colombo (News 1st) ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியை மூடியுள்ள மணலை அகற்ற வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்தனர். மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியை மணல் மூடியுள்ளமையால், கடந்த ஒரு மாதமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்த மணலை அகற்றக்கோரி அம்பாறை மாவட்ட கரையோர மீனவர் சங்கம் தொடர் போராட்டமொன்றை இன்று ஆரம்பித்தது. ஒலுவில் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கூடாரங்களை அமைத்து மீனவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மீள திறக்க வேண்டாம் எனவும், கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியில் மூடியுள்ள மணலை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தி ஒலுவில் பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபடும் பகுதிக்கு மறுபுறம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். ஒலுவில் துறைமுக நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த 3 ஆம் திகதி சென்றிருந்தனர். ஒலுவில் துறைமுகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமது காணிகளுக்கான நட்ட ஈடு உரிய வகையில் வழங்கப்படவில்லை எனவும் கடலரிப்பினால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.