இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பெண்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

by Bella Dalima 05-10-2018 | 5:44 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2018 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. காங்கோ நாட்டைச் சேந்த டெனிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜா, போர்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர். காங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். நாளொன்றுக்கு 18 அறுவை சிகிச்சைகளை அவர் செய்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்த போதும் இந்த ஆண்டு தான் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். யாஷிதி இன பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக நாடியா முராத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.