பேருவளை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் ஐவர் கைது

பேருவளை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் ஐவர் கைது

by Staff Writer 04-10-2018 | 9:05 AM
Colombo (News 1st) பேருவளை - பன்னில பகுதியில் இளைஞன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயாகல முன்ஹேன பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளைத் திருடுவதற்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தென்பகுதி பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கார் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது நேற்றிரவு அடையாளம் தெரியாத ஒருவரால் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வலதர முங்ஹேன பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவராவார்.