பெண் ஊழியர்களுக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொந்தரவு

கொழும்பு மாநகரசபையின் பெண் ஊழியர்களுக்கு உயரதிகரிகளால் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குறித்து விசாரணை

by Staff Writer 04-10-2018 | 7:06 AM
Colombo (News 1st) கொழும்பு மாநகரசபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பிரமிலா கோணவல முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். அதற்கமைய, சட்டத்தரணி, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் பெண் பிரதிநிதித்துவத்திற்கான உயர் அதிகாரி ஒருவர் அடங்கலாக விசாரணைக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தக் குழுவினூடாக, கொழும்பு மாநகரசபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் குறித்து இதற்கு முன்னர் தனக்கு எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.