ரெஜினா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ரெஜினா கொலை: சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Bella Dalima 02-10-2018 | 5:34 PM
Colombo (News 1st) யாழ். சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார். இதன்போது நீதவான் சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் - சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி சிறுமி ரெஜினா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.