மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் சதொச வளாக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 01-10-2018 | 2:00 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாக மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் இன்று (01) மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. விரிவுரைகள் உள்ளிட்ட ஏனைய சில விடயங்கள் காரணமாக குறித்த அகழ்வுப் பணிகள், ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இதன்படி, இன்று முதல் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக, களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார். கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 143 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டதைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகள், மன்னார் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் தலைமையில் நடைபெறுகின்றன.