ரூபாவின் வீழ்ச்சி: அரசின் புதிய நடவடிக்கைகள்

ரூபாவின் வீழ்ச்சி: அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகள்

by Staff Writer 30-09-2018 | 6:53 AM
Colombo (News 1st) ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு​ நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களுக்கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடு 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் காலப்பகுதிக்குள் கடன் ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், ஹைப்பிரிட் வாகனங்களின் பெறுதியின் 50 வீதத்திற்கு மட்டுமே வரிச்சலுகை பெற்றக்கொள்ள முடியும். இதேவேளை, குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டி, தொலைக்காட்சி, வாசனைத் திரவியம், கையடக்கத்தொலைபேசி மற்றும் ஏனைய தொலைபேசிகள், சலவை இயந்திரம், பாதணிகள் மற்றும் டயர் ஆகியவற்றை இறக்குமதி செய்யும்போது அவற்றின் பெறுதியின் 100 வீத வைப்புத்தொகையை வழங்க வேண்டும். செலாவணி விகிதத்தின் மாற்றத்தை அரசாங்கம் தொடர்ந்தும் கண்காணிப்பதுடன், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.