நாளை முதல் ரயில் கட்டணத்தில் மாற்றம்

ரயில் கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

by Staff Writer 30-09-2018 | 10:29 AM

ரயில் கட்டணங்கள் நாளை முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், குறைந்த பட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.   மூன்றாம் வகுப்பிற்கான குறைந்த பட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்த பட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள ரயில் கட்டணத்தில் திருத்தத்திற்கமைய, ரயில் பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளைக்கு மூன்றாம் வகுப்பில் பயணிப்பதற்கான புதிய கட்டணம் 80 ரூபாவாகும். கோட்டையிலிருந்து சிலாபத்திற்கான மூன்றாம் வகுப்புக் கட்டணம் 100 ரூபாவாகவும், கண்டிக்கான கட்டணம் 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோட்டையிலிருந்து புத்தளத்திற்கான மூன்றாம் வகுப்பு கட்டணம் 155 ரூபாவாகவும், நாவலப்பிட்டியவிற்கான கட்டணம் 160 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளன. மாத்தளைக்கான மூன்றாம் வகுப்புக் கட்டணம் 165 ரூபாவாகவும், ஹற்றனுக்கான கட்டணம் 190 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிற்கு மூன்றாம் வகுப்பில் பயணிப்பதற்காக இவ்வளவு காலமும் அறவிடப்பட்ட 165ரூபா கட்டணம் 215 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிற்கான முதலாம் வகுப்புக் கட்டணம் 760 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்புக் கட்டணம் 250 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது. பண்டாரவளைக்கான மூன்றாம் வகுப்புக் கட்டணம் 250 ரூபாவாகவும், பதுளைக்கான கட்டணம் 275 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது. திருகோணமலைக்கு மூன்றாவம் வகுப்பில் பயணிப்பதற்கான புதிய கட்டணம் 280 ரூபாவாகும். தலைமன்னாருக்கு முதலாம் வகுப்பில் பயணிப்பதற்கு 940 ரூபாவும், மூன்றாம் வகுப்பில் பயணிப்பதற்கு 305 ரூபாவும் நாளை முதல் அறவிடப்படவுள்ளன. 235 ரூபாவாகவிருந்த மட்டக்களப்பிற்கான மூன்றாம் வகுப்புக் கட்டணம் நாளை முதல் 315 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு முதலாம் வகுப்பில் பயணிப்பதற்கு 1080 ரூபாவும், மூன்றாம் வகுப்பில் பயணிப்பதற்கு 350 ரூபாவும் அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.