மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரம்

மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரமொன்றை உருவாக்க வேண்டும்: நிதி அமைச்சர்

by Staff Writer 29-09-2018 | 8:21 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்ட விலைச்சூத்திரம் காரணமாக ஒவ்வொரு மாதமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதேவேளை, மின் கட்டணத்திற்கான விலைச்சூத்திரமொன்றை தயாரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மாத்தறை பௌத்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர், நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் கூறும் விடயங்களை நாம் மேற்கொள்வதில்லை. மின் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் நாம் ஏற்றுள்ளோம். விலைச்சூத்திரத்தை தயாரிக்க விசேட குழுவொன்றை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். இது சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை அல்ல. இலங்கையின் யோசனையாகும். எதிர்காலத்தில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரிக்கக்கூடும். இவை அனைத்தையும் அரசாங்கத்தினால் தனியாக தாங்கிக்கொள்ள முடியாது. உடனடியாக செய்யப்போவதில்லை. இன்னும் இரண்டு வருடங்கள் சென்றாவது விலைச்சூத்திரத்திற்கு செல்ல வேண்டும்.