விக்னேஷ்வரனின் மேன்முறையீடு பரிசீலிக்கப்படவுள்ளது

டெனீஸ்வரன் பதவி நீக்கம்: விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு பரிசீலிக்கப்படவுள்ளது

by Staff Writer 28-09-2018 | 4:03 PM
Colombo (News 1st) அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என இன்று தீர்மானித்த நீதியரசர்கள் குழாம் பரிசீலனையை ஒத்திவைத்தது. வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வௌியிட்ட வர்த்தமானிக்கு அமைய செயற்படுவதை இடைநிறுத்தி கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்தது.