அரச குடும்ப மரபை மீறினாரா மேகன் மேர்க்கல்?

கார்க் கதவைத் தானே சாத்திய மேகன் மேர்க்கல்: அரச குடும்ப மரபை மீறினாரா?

by Bella Dalima 28-09-2018 | 5:32 PM
லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவிற்கு தனது கருப்பு நிற காரில் சென்றிருந்த இளவரசி மேகன் மேர்க்கல் கார் கதவைத் தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. நாம் காரில் இருந்து இறங்கியவுடன் கார்க் கதவை சாத்துவது அனிச்சை செயலான ஒன்று. ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மேர்க்கல், கார்க் கதவை அவரே சாத்தியது இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும் ஆகியுள்ளது. ஏனென்றால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச குடும்பத்தினர் கார்க் கதவை தாங்களே சாத்துவது இல்லை. இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹரியை மணந்த மேகன் மேர்க்கல் சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவிற்கு தனது கருப்பு நிற காரில் சென்றிருந்தார். இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார்க் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல் இளவரசியே கார்க் கதவை மூடிவிட்டார். அந்த நபர், கையை சடாரென்று விலக்கிக்கொண்டு ஆச்சரியத்தில் வாய் பிளந்தார். இந்த நிகழ்வுதான், புகழ்பெற்ற ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் விவாதப்பொருளாகவும் ஆகியுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு சாரார் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள், இளவரசி மேகன் மேர்க்கலையும் கவனித்து வருகிறார்கள். அவர் எவ்வித பாசாங்கும் இல்லாமல், எளிமையாக இருப்பார் என்று அவர்கள் கணித்துள்ளனர். அரண்மனை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடியுள்ளார்” என்று எழுதியுள்ளார்.