குசும்தாச, பியதாச பிணையில் விடுவிப்பு

குசும்தாச மகாநாம, பியதாச திசாநாயக்க பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 25-09-2018 | 7:22 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் செயலணித் தலைவர் கலாநிதி குசும்தாச மகாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய பிரஜையொருவரிடமிருந்து 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களும் நான்கரை மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். நான்காவது தடவையாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான 6 சரீரப்பிணைகளின் பேரில் சந்தேகநபர்களை பிரதம நீதவான் விடுவித்தார். பிணை உத்தரவு தொடர்பில் ஆட்சேபனை காணப்படுமாயின் டிசம்பர் 11ஆம் திகதி மன்றில் மனு தாக்கல் செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.