அத்தனகல்ல பாலம் திறப்பு விழாவில் அமைதியின்மை

அத்தனகல்ல பாலம் திறப்பு விழாவில் வெற்றிக்கோஷமும் கூச்சல் குழப்பமும்

by Staff Writer 22-09-2018 | 8:36 PM
Colombo (News 1st)  அத்தனகல்ல ஓயாவை ஊடறுத்துள்ள அத்தனகல்ல - கோனகல பாலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, நிதி மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் லசந்த அலகியவத்த ஆகியோரின் தலைமையில் அத்தனகல்ல - கோனகல பாலத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் பாலத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டனர். சிலரின் வெற்றிக்கோஷத்துடனும் எதிர்ப்புக் கூச்சலுக்கு மத்தியிலும் பாலம் திறந்து வைக்கப்பட்டது. பாலத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அமைச்சர் பைசர் முஸ்தபா உரையாற்றுவதற்கு முன்னர் அப்பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். எவ்வாறாயினும், எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கூச்சலுக்கு மத்தியில் அமைச்சர் உரையாற்றினார்.  

ஏனைய செய்திகள்