தோற்றத்தை மீண்டும் மாற்றி நடிக்கும் விஜய் சேதுபதி

தோற்றத்தை மீண்டும் மாற்றி நடிக்கவுள்ள விஜய் சேதுபதி

by Bella Dalima 21-09-2018 | 7:14 PM
அறிமுக இயக்குனரின் புதிய படத்தில் தன்னுடைய தோற்றத்தை மீண்டும் மாற்றி நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். புறம்போக்கு படத்தில் பணியாற்றியபோது விஜய் சேதுபதிக்கும் ரோகாந்த்துக்கும் நல்ல புரிதல் காரணமாக நட்பு உருவானது. அதேநேரம், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் விஜய் சேதுபதியை அழைத்து, ரோகாந்த்திடம் உங்களுக்கேற்ற கதை ஒன்று இருக்கிறது என கூறி கேட்க வைத்தார். விஜய் சேதுபதிக்கு அந்த கதை பிடித்துப்போக அப்போதே ரோகாந்த்திடம் சம்மதம் சொல்லிவிட்டார். விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பதால், தற்போது இந்தப்படத்திற்கு ஏற்ற திகதிகளை ஒதுக்கியுள்ளார். பல படங்களில் தோற்றத்தை மாற்றி நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தோற்றத்தையும் மாற்ற இருக்கிறார். மணி ரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், சுப்பர்ஸ்டார் ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சைரா' என மிகப்பெரிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் இந்த புதிய படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதிக்கேற்ற மாஸ் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் பங்குபெறும் பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.