நயன்தாராவின் வளர்ச்சி ஆச்சரியப்படவைக்கிறது: ஜோதிகா

நயன்தாராவின் வளர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது: ஜோதிகா

by Bella Dalima 19-09-2018 | 4:21 PM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வளர்ச்சி தன்னை ஆச்சரியப்பட வைப்பதாக ஜோதிகா தெரிவித்துள்ளார். சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளைக் குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளப் பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் அவரது கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன. இதனால் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டார் என்கின்றனர். அவரது கைவசம் விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைமா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் உள்ளன. நயன்தாராவின் வளர்ச்சி ஜோதிகாவையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நயன்தாரா குறித்து ஜோதிகா கூறியதாவது,
நயன்தாரா தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார். இது பெரிய சாதனை. ஒரு பெண்ணாக தொடர்ந்து வெற்றிகள் பெற்று வருகிறார். எந்த நேரமும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார். அது எளிதான வி‌ஷயம் இல்லை. கதாநாயகர்களை முதன்மைப்படுத்தாத படங்களில் நடிக்கிறார். ஒரே நாளில் பல காட்சிகளில் நடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்துக் கொடுக்கிறார். இது மிகவும் கடினமான செயல். நடிப்பது பெரிய கலையாக இருந்தாலும் பல தடைகளைத் தாண்டி குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக்கொடுக்கும் நயன்தாராவைப் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது.