Colombo (News 1st) ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததை அடுத்து, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 164 ரூபாவை விட அதிகரித்துள்ளது.
1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொலர் ஒன்றின் விலை 8 ரூபா 95 சதமாகக் காணப்பட்டது.
அந்த காலப்பகுதியில் நிதி அமைச்சராகவிருந்த ரோனி டி மெலின் பதவிக்காலம் நிறைவுபெறுகையில், டொலர் ஒன்றின் பெறுமதி 36 ரூபா வரை அதிகரித்திருந்தது.
அப்போது முதல் ஆரம்பமாகிய பிரேமதாச யுகத்தில், நெய்னா மரிக்கார் மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோர் நிதி அமைச்சர்களாக செயற்பட்டதுடன், அந்த யுகத்தின் நிறைவில் டொலர் ஒன்றின் பெறுமதி 49 ரூபா 17 சதம் வரை அதிகரித்திருந்தது.
பின்னர் சந்திரிக்கா குமாரதுங்கவின் காலப்பகுதியில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கே.என்.சொக்சி மற்றும் சரத் அமுணுகம ஆகியோர் நிதி அமைச்சர்களாக பதவி வகித்தனர். இதன்போது 49 ரூபா 17 சதமாக இருந்த டொலரின் பெறுமதி 100 ரூபா வரை உயர்வடைந்தது.
ஜனாதிபதி பதவி மற்றும் நிதி அமைச்சர் பதவி ஆகிய இரண்டும் கிடைத்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலம் நிறைவுபெற்ற 2015 ஆம் ஆண்டு டொலரின் பெறுமதி 135 ரூபா வரை அதிகரித்தது.
எனினும், மூன்று வருட நல்லாட்சி அரசாங்கத்தில் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் நிதி அமைச்சர்களாக பதவி வகித்த இதுவரையான காலப்பகுதியில், 164 ரூபா வரை டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.