கைதிகள் 8 பேரின் உண்ணாவிரதம் தொடர்கிறது

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 8 பேர் அநுராதபுரம் சிறையில் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

by Bella Dalima 15-09-2018 | 6:25 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14) காலை முதல் 8 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் தம்மை விடுவிக்குமாறு கோரியே கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம் மீதான வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் கைதிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். தம்மை விடுவிப்பதற்கான வழக்கு விசாரணைகளில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின், குறுகிய கால புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறும் குறித்த கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.