திருகோணமலை களப்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து ஆய்வு
by Bella Dalima 15-09-2018 | 3:18 PM
Colombo (News 1st) திருகோணமலை - களப்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
களப்பின் 35 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு பதிவாகியதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன குறிப்பிட்டார்.
நேற்று (14) நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 1 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நிலஅதிர்வு பதிவாகியதாக அவர் கூறினார்.
இந்த நில அதிர்வு 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
சிறியளவில் ஏற்பட்ட நில அதிர்வு எனவும் இதனால் சுனாமி அபாயம் இல்லையெனவும் அவர் கூறினார்.
இன்று அதிகாலை பதிவாகிய இந்த நில அதிர்வின் பின்னர் வேறு நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன சுட்டிக்காட்டினார்.