நிலுக்ஷியா மேரிக்கு பல்கலைக்கழக வாய்ப்பு

நிலுக்ஷியா மேரிக்கு பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டியது

by Staff Writer 14-09-2018 | 4:06 PM
Colombo (News 1st)  அநீதியாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்திருந்த நிலுக்ஷியா மேரியின் நிலை தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வௌியிட்டிருந்த நிலையில், அவருக்கு பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ ஆராய்ந்து பார்த்ததை அடுத்தே நிலுக்ஷியா மேரிக்கான உயர்கல்வி வாய்ப்புக் கிடைத்துள்ளது. அநீதி இழைக்கப்பட்டிருந்த குறித்த மாணவி இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சரை சந்தித்தார். இதன்போது, அவரை அடுத்த வாரம் களனி பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உத்தரவிட்டார். நிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றியிருந்தார். 2A, 1B பெறுபேற்றைப் பெற்று பெற்றோரையும் கிராமத்தையும் பெருமையில் ஆழ்த்தி மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப் பிடித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். இந்த மாணவி களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காமையினால் , இணையத்தளம் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதேவேளை, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவிக்கு உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.