த.தே.கூ. சார்ந்து அரசியல் செய்ய வேண்டாம்

த.தே.கூ. சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்: சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆனந்த சங்கரி கடிதம்

by Staff Writer 14-09-2018 | 7:51 PM
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஷ்வரனுக்கு உட்கட்சி விவகாரத்தால் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமல் காலங்கள் ஓடிவிட்டதாக ஆனந்த சங்கரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமழரசுக் கட்சியினர் முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்க நடந்துகொண்ட விதத்தை எந்தவொரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என ஆனந்த சங்கரி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தரத் திட்டங்களையோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வுகளையோ, அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பிலோ சி.வி. விக்னேஷ்வரனால் எதனையும் செய்யமுடியாமற் போனதை தாம் அறிவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சி.வி. விக்னேஷ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் இனி ஈடுபட வேண்டாம் என ஆனந்த சங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு அவர்களுடன் சேர்ந்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.