காலியில் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதி விபத்து

காலியில் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதி விபத்து: 4 மீனவர்கள் உயிரிழப்பு

by Staff Writer 12-09-2018 | 6:29 PM
Colombo (News 1st)  காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதி விபத்திற்குள்ளானதில் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மீன்பிடிப் படகிலிருந்த ஒருவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார். இன்று அதிகாலை தமது படகு கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதாகக் காப்பாற்றப்பட்ட மீனவர் குறிப்பிட்டுள்ளார். கவிழ்ந்த படகில் மீனவர் ஒருவர் உள்ளதாக குறித்த கப்பலில் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, கடற்படையின் டோரா படகொன்று இன்று பகல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இதன்போது, படகில் இருந்த மீனவர் காப்பற்றப்பட்டதுடன், சுழியோடிகளின் உதவியுடன் 4 மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மீட்கப்பட்ட சடலங்கள் காலி மீன்பிடித்துறைமுகத்திற்கு எடுத்து வரப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். பேருவலையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.