அவன்ற் கார்ட் தலைவருக்கு எதிரான குற்றப்பத்திரம்

அவன்ற் கார்ட் தலைவர் மற்றும் பாலித பெர்னாண்டோவிற்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது

by Staff Writer 12-09-2018 | 4:22 PM
Colombo (News 1st)  அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியப்பதிவு இன்று ஆரம்பிக்கப்பட்ட போதே குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது. 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் வழங்கியமை உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டின் முதலாவது சாட்சியாளரான விடத்தல்தீவு - 532 படைப்பிரிவு முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் செவான் அசேல குலதுங்க இன்று மன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார். வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.