அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சகோதரர் வேட்பாளராகலாம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் வேட்பாளராகக் களமிறங்க முடியும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 12-09-2018 | 1:30 PM
Colombo (News 1st) அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் வேட்பாளராகக் களமிறங்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்களுக்கு யார் தேவை என்பதை கட்சியும் கூட்டமைப்பும் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, 'தி ஹிந்து' நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப உறுப்பினரா அல்லது வௌிநபர்களா வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளனர் என தி ஹிந்து நாளிதழ் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 30 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தனது மகனான நாமல் ராஜபக்ஸவால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தலைமை தாங்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ, தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.