வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில்

வியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

by Staff Writer 11-09-2018 | 9:08 PM
Colombo (News 1st) வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டுப் பிரதமர் Nguyen Xuan Phuc-ஐ இன்று சந்தித்தார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெறும் ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (10) மாலை வியட்நாமின் நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, வியட்நாமின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பதில் அமைச்சர் குயென் மான் ஹங் வரவேற்றார். வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையே இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழாவை அடுத்த வருடம் வியட்நாமின் ஹெனொய் நகரை கேந்திரமாகக் கொண்டு நடத்தவுள்ளதுடன், அதற்கு இலங்கையின் ஒத்துழைப்பை வழங்குமாறும் அந்நாட்டுப் பிரதமர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை மற்றும் வியட்நாமிற்கு இடையேயான வரலாற்று உறவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒருங்கிணைந்த குழுவொன்றை அமைப்பதற்கான தேவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.