ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்

10 கோடி பேரின் தகவல்களைத் திருடிய ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்

by Bella Dalima 08-09-2018 | 4:34 PM
அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 10 கோடி பேரின் தகவல்களைத் திருடிய ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர் (Hacker) ஜோர்ஜியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவமாக இது கருதப்படுகிறது. பின்னர் அமெரிக்கா, இந்த தகவல்களைத் திருடியது ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ரேய் டியூரின்(35) எனும் ஹேக்கர் என்பதைக் கண்டுபிடித்தது. ஆனால், அவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால், கைது செய்ய முடியவில்லை. திருடிய தகவல்களை வைத்து முறைகேடாக மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டிய ஆன்ரேய் டியூரின், அவற்றை பங்கு சந்தை, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் செலவழித்துள்ளார். மேலும், அடுத்தவர்களின் தகவல்களைப் பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் பல நிதி நிறுவனங்களிலும் திருட்டில் ஈடுபட்ட இவர் ஜோர்ஜியாவில் இருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்னர் அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜோர்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது. அமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் பட்சத்தில், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.