by Staff Writer 08-09-2018 | 12:24 PM
COLOMBO (News 1st) மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் வழமை போன்று இயங்குவதாக நியூஸ்பெஸ்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், பாதுகாப்புக் கருதி வைத்தியசாலையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3ஆம் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தையின் இதயத்துடிப்பு குறைவடைந்ததையடுத்து, விசேட மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் கணவர் பிரசவ விடுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி மற்றும் காவலாளியைத் தாக்கியுள்ளர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
அதனையடுத்து, மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து வைத்தியர்கள் நேற்று முழுவதும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.