நல்லைக் கந்தனின் இரதோற்சவம்: நேரடி ஔிபரப்பு

நல்லைக் கந்தனின் இரதோற்சவம்

by Staff Writer 08-09-2018 | 7:29 AM
COLOMBO (News 1st) வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று (08) நடைபெறுகின்றது. நல்லூர் கந்தன், தேரேறி திருவீதி உலா வரும் அழகைக் காண்பதற்காய், இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர். அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டபப் பூசை ஆகியன காலக் கிரமமாக முருகப்பெருமானுக்கு நடைபெற்றன. ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப்பெருமான் தேரேறி வீதியுலா வருதற்குப் புறப்பட்டுள்ளார். அதேநேரம், யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்டின் கந்தகோட்டம் விசேட கலையகம் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கம் - 676, பருத்தித்துறை வீதி, நல்லூர் என்ற முகவரியில் கந்தகோட்டம் விசேட கலையம் அமைந்துள்ளது. ஊடகத்துறையில் தடம்பதிக்கும் ஆர்வத்துடன் உள்ள ஆற்றல்சார் இளைஞர், யுவதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட்டின் கந்தகோட்டம் விசேட கலையகம் இந்த வருடம் மூன்றாவது தடவையாக அமைக்கப்பட்டுள்ளது. செய்தி வாசிப்பதற்கான திரைப்பரீட்சை மற்றும் குரல்தேர்வு என்பன இதன்போது நடைபெறுவதுடன், திறமையை வௌிப்படுத்தும் இளவல்களுக்கு நியூஸ்பெஸ்ட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பதற்கான அரிய வாய்ப்பும் கிட்டவுள்ளது.