மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு

வறட்சி நிலவும் நிலையில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு

by Bella Dalima 07-09-2018 | 4:09 PM
Colombo (News 1st) நாளாந்த மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் வறட்சியான வானிலை நிலவுகின்ற நிலையிலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். நீர் மின் உற்பத்தி இடம்பெறும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 75 வீதமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வறட்சியினால் மக்களின் நாளாந்த நீர் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு தேவையான நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.