ரொய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களுக்கு வலுக்கும் ஆதரவு

சிறைத்தண்டனை பெற்ற ரொய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களுக்கு வலுக்கும் ஆதரவு

by Bella Dalima 05-09-2018 | 5:27 PM
மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆதரவுக்குரல்கள் அதிகரித்து வருகின்றன. மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு இராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹின்யா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த நிலையில், ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்நாட்டு இராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களான வோ லோன் (32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகிய இருவருக்கும் மியன்மார் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில், மியன்மாரின் பிரபலமான 7 Day Daily பத்திரிகை முகப்புப் பக்கத்தை கருமை நிற வண்ணத்தில் வெளியிட்டு பத்திரிகையாளர்களின் கைதுக்கு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகையாளர்களின் கைதுக்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டு வருகிறது.